100 தொன் மருத்துவ திரவ ஒட்சிசனை ஏற்றிய இந்திய கடற்படையைச் சேர்ந்த 'சக்தி' எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலை வரவேற்க, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜெகொப் ஆகியோர் கொழும்பு துறைமுகம் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த ஒட்சிசன் தொகையை ஏற்றிய குறித்த கப்பல், கடந்த வியாழக்கிழமை (19) இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டு இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, மற்றுமொரு தொகுதி ஒட்சிசனை கொண்டு வருவதாற்காக இந்தியா சென்ற 'சக்தி' எனும் அதே பெயரைக் கொண்ட இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் நாளை (23) காலை கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பல் கடந்த கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஓகஸ்ட் 18ஆம் திகதி சென்னை துறைமுகத்தை அடைந்திருந்தது.
நாட்டில் கொவிட்-19 டெல்டா திரிபு தொற்றைக் கொண்ட தொற்றாளர்களின் நாளுக்கு நாள் அதிகரிப்பைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு அவசியமான ஒட்சிசன் தேவையை ஈடுசெய்ய குறித்த ஒட்சிசன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
from tkn