அனுமதியின்றி பயணித்த CTB பஸ் திருப்பி அனுப்பிவைப்பு

நடத்துனருக்கு பொலிஸார் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக பஸ் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 19ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பஸ் மற்றும் ரயில் சேவைகள் நேற்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தியதில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.

அதனால் அத்தியாவசிய தேவைகளின்றிய பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு ஈரப்பெரியகுளத்தில் வைத்து அந்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது. நடத்துனருக்கு இதன்போது பொலிஸார் எச்சரிக்கை செய்தனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில்களில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை