விசாரணைக் குழு அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்

பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் 2021 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிப்பதற்கு அக்குழு தீர்மானித்துள்ளது.  பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் இக்குழு கூடியதாக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக தெரிவித்தார்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், ஆர்.எம்.ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி ஏற்பட்டது போன்று குழுப்பமான சூழ்நிலை மீண்டும் பாராளுமன்றத்தில் ஏற்படாதிருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இதற்கமைய இதுபோன்ற சம்பவங்களினால் ஒட்டுமொத்த பாராளுமன்றத்திலும் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த இக்குழு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான நீண்டகால மற்றும் குறுகியகால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை