எரிபொருள் விலை அதிகரிக்க காரணம்

- நாமல் ராஜபக்‌ஷ விளக்கம்

உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொவிட்19 நெருக்கடியால் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது. அரசாங்கம் விரும்பி எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லையென அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு அரசாங்கமும் எரிபொருள் அல்லது அத்தியாவசிய பொருட்களின் விலைகளை விருப்பத்துடன் அதிகரிப்பதில்லை. ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார என அனைவரும் கூறும் பிரச்சினைகள் இன்று நேற்று உருவானவை அல்ல. 20, 30 வருடங்களாக நாம் எதிர்கொண்டுவரும் சவால்களாகும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக கூறும் காரணி, நாம் பிறந்த காலத்திலிருந்து பேசப்படும் விடயமாகும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருள் தொடர்பில் விலை சூத்திரமொன்று கொண்டுவரப்பட்டது. இன்றுள்ள உலக விலைக்கு அந்த விலை சூத்திரத்தை பயன்படுத்தினால் எரிபொருளின் விலை பாரிய அளவில் அதிகரித்திருக்கும். இன்றும் நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 50 வருடகால அரசியல் வரலாற்றில் எதிர்கொள்ளாத ஒரு பிரச்சினையாகும். கொவிட்19 தொற்று உலகளாவிய தொற்றாகும்.

தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளோம். உலகில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலில் நிறுவனங்களுடன் பேசி வேலைவாய்ப்புகளை பாதுகாக்க முடிந்துள்ளது. அந்நிய செலாவணியை பாதுகாத்துள்ளோம். அதேபோன்று கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

இவை அனைத்து சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் 10 அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

கூட்டணி அரசாங்கத்தில் பல்வேறு கொள்கைகளை பின்பற்றும் நபர்கள் இருக்கின்றனர். பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. அதேபோன்று கட்சிகளுக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்தாக முடியாது. எமது அரசாங்கத்தின் உள்ளக ஜனநாயகத்தை நாம் தெளிவாக பாதுகாக்கிறோம்.

அரச நிர்வாகத்தில் நிதி முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான காரணியாகும். நிதி வெளிப்படைத்தன்மையையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் பாதுகாத்துக்கொள்ளும் காலத்துக்கேற்ற தீர்மானமாகவே எரிபொருள் விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவையும் துறைசார் அமைச்சரும் இணைந்துதான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டோம். இது தற்காலிமான அதிகரிப்பாகும். பொதுஜன பெரமுனவின் கருத்தையே அதன் பொதுச் செயலாளர் கூறியிருந்தார்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை நாம் பாதுகாப்போம். நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை