சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் வழிவகுக்கும் ஹஜ்

உலகலாவிய ரீதியில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நிலவும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலின் காரணமாக புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு மக்கா நகர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஹஜ்ஜின் மகத்துவம், தாத்பரியம், படிப்பினை போன்றவற்றை அறிவதன் மூலம் ஹஜ். செய்ய செல்ல முடியாது கவலையடைந்துள்ள ஹாஜிகளுக்கு ஆறுதலா இருக்கலாம்.

அல்லாஹ்தஆலா ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக ஹஜ்ஜை முஸ்லிம்களின் மீது விதியாக்கினான். ஹஜ்ஜூ என்னும் புனித யாத்திரை செல்லும் ஒருவர் தனது இறைநம்பிக்கையை முழுமையாக்குவதுடன் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்மையாகவே அடிபணிந்து இருப்பதை வெளிப்படுத்தியும் காட்டுகிறார். சாதாரணமான புனித தலங்களுக்கு சென்று வருவதைப் போன்றல்லாமல் ஹஜ்ஜானது அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்படும் உரிய கிரியையாகும். அது ஆன்மீக வளர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு ஓர் முக்கிய அடையாளமாகவும் அமைகின்றது.

மனிதன் இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான விதிகளையும் வழி முறைகளையும் இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. துறவற வாழ்வு வாழ்வதற்கு பதிலாக மனிதன் ஈருலகிலும் விமோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் இலக்காக உள்ளது.

அந்த வகையில் உலகப் பற்றை நீக்குவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் அது வழங்கியுள்ளது. மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யும் வழக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புதிதாகப் புகுத்தவில்லை. இப்பழக்கமும் முறையும் தொன்று தொட்டு வந்த ஒன்றாகும். மனிதன் தன்னை இறைகட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து எள்ளளவும் குறைபாடின்றி வாழவென ஹஜ் நல்லதொரு பயிற்சியை அளிக்கின்றது.

அதாவது இறைவன் ஒருவனே என்பதற்கு மத்திய இடமாக நிறுவபட்டுள்ள புனித கஃபாவிலே உலகெங்கிலும் இருந்தும் வரும் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் ஒருமித்துக்கூடி நிற்கிறார்கள். அங்கு ஹஜ்ஜாஜிகளிடையே உடை வாழ்க்கை முறை, இஹ்ராம் கட்டும் போது உணர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் ஒற்றுமை நிலைபெறக் காண்கின்றோம்.

ஹஜ்ஜின் போது சமத்துவம் முழுமை அடைவது நன்கு நிரூபிக்கப்படுகிறது. சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஹஜ்; விளங்குகின்றது.

குறிப்பாக 'ஷவ்வால்', 'துல்கஃதா' ஆகிய இரு மாதங்கள் முழுவதும் 'துல்ஹஜ்' மாதத்தில் முதல் 9 நாட்களும் மிகப் புனித நாட்களாக யாத்திரிகர்களால் கருதப்படுகின்றது. ஹஜ்ஜூக்காக செல்வோர் எல்லாவித விலக்கப்பட்ட செயல்களையும் இக்காலத்தில் தவிர்த்துக்; கொள்வர்.

இது குறித்து திருமறை கூறுவதாவது: ஹஜ்ஜூ (அதெற்கெனக் குறிப்பிட்ட ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்கள்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் (தன்மீது) கடமையாக்கிக் கொண்டால் துல்ஹஜ்ஜூ (மாதம் பத்தாம் நாள்) வரையில் உடலுறவு கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பேசுதல், சண்டைச் சச்சரவுகள் செய்தல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். நீங்கள் என்ன காரியத்தைச் செய்தாலும் அவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். இன்னும் ஹஜ்ஜூ யாத்திரைக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் முன்கூட்டியே சித்தப்படுத்திக் கொள்ளுங்கள். இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதே ஹஜ்ஜூ நமக்கு படித்துத்தரும் பாடம்.

ஏனெனில் இது இறைவன் நமக்கு இட்ட கட்டளை. அதற்கும் நாம் பணிய வேண்டும் என்ற ஒரே நோக்குடையவனாக அவன் செயல்படுகிறான். ஹஜ்ஜாஜி கஃபாவை வலம் வருவதில் இருந்தும் 'ஹஜ்ஜருல் அஸ்வத்' என்ற கல்லை முத்தமிடுவதில் இருந்தும் ஸபா, மர்வா எனும் இரு குன்றுகளிடையே தொங்கோட்டம் ஓடுவதில் இருந்தும் 'ஜம்ரா' எனும் பகுதியில் கற்களை எறிவதில் இருந்தும் தனக்கிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பற்றி துருவி ஆராய நாடாமலேயே இறைவன் உத்தரவுக்கு அப்படியே பணிபுரந்து அவன் செயல்படுகிறான்.

இப்புனித யாத்திரையானது இவ்வுலகத் தொடர்புகள் அனைத்தும் அறுத்து விட்டு மறுமைக்காக ஆயத்தமாகும் இறைவனின் திருச்சந்திப்பை பெறுவதற்கும் ஓர் அடையாளமாக இருக்கும்.

ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மாபெரும் நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை அரசியல், சமுதாயம், பொருளாதாரம், மதம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருப்பதையும் காணலாம்.

முதலாவதாக ஹஜ்ஜூ யாத்திரையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகும் போது அப்பிரயாணத்தில் நமக்கு ஏற்படக்கூடிய அவசியமான செலவுகளுக்குள்ள பணத்தை சேகரித்து அதனை எடுத்து செல்கிறோம்.

ஹஜ்ஜூக்காக செல்லும் போது நாம் வழியில் பல நாடுகளைக் கடந்து செல்கிறோம். பல நாட்டு மக்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது. இப்புது அனுபவங்கள் நமது அறிவை வளர்க்கிறது. மேலும் பிரயாணம் செய்யும் பழக்கத்தையும் நமக்கு உண்டாக்கித் தருகின்றது.

அரோபியாவை அடைந்ததும் இஸ்லாத்தின் பிறப்பிடத்தைப் பார்ப்பதனால் நம் இதயங்கள் பேருவகை கொண்டு ஆனந்தப் பெருக்;கெடுத்து ஓடுகிறது. மக்கா நகரை நோக்கிச் செல்லும் போது தேவையற்ற எல்லா எண்ணங்களையும் நாம் நம் மனதை விட்டும் அகற்றி விடுகிறோம். நம் எண்ணம் எல்லாம், நல்லவற்றையே முற்றாக நாடி, அவற்றைக்கொண்டே நிரப்பி விடுகிறோம். நாம் 'இஹ்ராம்' என்னும் யாத்ரீகனின் ஹாஜியின் உடையை அணிந்ததும் நம் உள்ளத்தில் இயற்கையாகவே ஓர் எளிய வாழ்க்கையின் உணர்வும் எளிய தன்மையும் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் எல்லா முஸ்லிம்களும் ஒரேவிதமான எளிய உடையை அணிந்திருப்பதைப் பார்க்கும் போது, முஸ்லிம்கள் எக்குலத்தவராக இருப்பினும், எந்த நிறத்துடையவராக இருப்பினும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும் எல்லோரும் சகோதரர்களே என்ற நல்லுணர்வை நாம் பெறுகிறோம். அதேபோன்று எல்லா முஸ்லிம்களும் ஒருவர் பின் ஒருவராய் கஃபாவைச் சுற்றி வலம் வரும் போது, உலகிலிருந்து அங்கு வந்திருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரேவிதமான உடையை அணிந்து கொண்டு ஒரே விதமான செயல்களையே செய்துகொண்டிருப்பதை நம் கண்கூடாய்ப் பார்க்கின்றோம். அப்போது இஸ்லாத்தின் சர்வ வியாபகமான உலகெலாம் அடைய வளைந்து புடைசூழும் தன்மையையும் எல்லா முஸ்லிம்களும் உலக அரங்கில் சமமே என்பதனையும் நாம் தெளிவாக உணர்கிறோம்.

ஹஜ்ஜின் ஊடாக ஒருவரை ஒருவர் நல் முறையில் அறிந்துகொள்ளவும் ஒருவருக்கொருவர் தத்தம் அனுபவங்களை சொல்லி தம் உலக அறிவை விசாலப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. இதன் ஊடாக முஸ்லிம் சகோதரத்துவத்தில் வளர்ச்சியும் நல்லெண்ணமும் ஏற்படுகின்றன. எனவே ஹஜ் எண்ணற்ற நற்பயன்களையும் ஆன்மிக வளர்ச்சிக்கும் உலக பெரு வாழ்விற்கும் அது உறுதுணையாக இருப்பதையும் எம்மால் கண்டு கொள்ள முடியும்.

Fri, 07/09/2021 - 13:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை