ஹிஷாலினியின் சடலம் நேற்று தோண்டியெடுப்பு

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனைக்கு அனுப்பி வைப்பு

நீதிகிடைக்கும் வரை அழமாட்டேன் என தாய் சபதம்; உறவினர்கள் கதறியழுகை

 

ரிஷாத் பதியுதீனின் எம்.பி வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமான டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஷாலினியின் சடலம் நேற்று (30) இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து சென்ற சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மற்றும் கண்டியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் ஹிஷாலியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

டயகம பிரதேசத்திற்கு நேற்றுக் (30) காலை 9.00 மணியளவில் அதிகாரிகள் குழுவினர் சென்றதன் பின்னர் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. படிப்படியாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியின்போது அங்கு புதைகுழி மண் பரிசோதிக்கப்பட்டது. கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கமைய தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மழை வந்தால் பாதுகாப்பாக இருக்க மயானத்தில் புதை குழிக்கு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. சடலம் அடங்கிய பேழையை நேற்று சரியாக 12.20க்கு பாதுகாப்பாக குழியிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேசையில் சடலம் வைக்கப்பட்டு சவப்பேழை திறக்கப்பட்டு சடலம் அடையாளம் காணப்பட்டது.

சடலத்தை அடையாளம் காட்ட விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்புக்கமைய சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வருகை தந்து சடலத்தை நீதவான் முன்னிலையில் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் கண்டி, பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலத்தை அடையாளம் காட்ட வந்த உறவினர்களின் கண்களில் நீர் கொட்டினாலும் சிறுமியின் தாய் கதறி அழுவதற்கு முடியாமலிருந்தார். உனக்கு நீதி கிடைக்கும் அதுவரை அழமாட்டேன் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தாய் ஆக்ரோசமாக தெரிவித்திருந்தார். சிறுமியான ஜூட்குமார் ஹிஷாலினி தீக்காயங்களுக்குள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில்  கடந்த 15.07.2021 அன்று மரணமானார்.

இந்த சிறுமியின் உயிரிழப்பு இன்றும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் மர்ம உயிரிழப்பாகவே உள்ளது. இச்சிறுமியின் இறப்புக்கு பின் அவரது உடல் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சவப்பெட்டி முற்றாக மூடப்பட்டு சிறுமியின் பெற்றோருக்கு கையளிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகம் அதையடுத்து வழங்கப்பட்ட அழுத்தம் இன்றும் மலையகம் மற்றுமன்றி நாட்டில் பல பாகங்களிலும் போராட்ட வடிவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் இந்த சிறுமி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் வீட்டில் எவ்வாறெல்லாம் வழிநடத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டார் என்பது தொடர்பில் மட்டுமன்றி வன்புனர்வு விடயங்களும் வெளியானது.

இந்த நிலையில் சிறுவர் அமைப்புகள், அதிகார சபைகள், மனித உரிமை மீறல் தாபனங்கள், பொது அமைப்புகள், அரசியல்வாதிகள் ஆகியோர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தத்தினால் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அண்மையில் சிறுவர் உரிமை பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மனித உரிமை மீறல் அமைப்பிடம் சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தை வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் தனது மகளின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் சடலத்தை தோண்டி மீண்டுமொறு பிரதே பரிசோதனையை சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டுமென முறையிட்டிருந்தனர்.

இதற்கமைய கொழும்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் மனித உரிமை மீறல் அமைப்பு நீதிமன்றத்தை நாடி சிறுமியின் சடலத்தை இரண்டாவது முறையாக பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு கடந்த நாட்களாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் சிறுமி மரணம் தொடர்பில் விசேடமாக விசாரிக்க கொழும்பிலிருந்து விசேட பரிசோதனை குழு ஒன்றும் டயகமைக்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந் நிலையில் நேற்று நுவரெலியாவுக்கு வருகை தந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர், நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி. லூஷாகா குமாரி ஜயரத்ன, சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி அதை உடல் கூற்று பரிசோதனைக்காக கண்டி பேராதனிய வைத்தியசாலைக்கு அனுப்ப அனுமதி கோரியிருந்தனர்.

ஹற்றன் விசேட,ஹற்றன் சுழற்சி, நுவரெலியா தினகரன்,நோட்டன் பிரிஜ்

Sat, 07/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை