இலங்கை - சீன இராஜதந்திர உறவுகள் 65 வருட பூர்த்தி

தங்கம், வெள்ளியில் 1,000 ரூபா குற்றிகள் வெளியீடு

இலங்கை - சீன இராஜதந்திர உறவுகளின் 65 ஆண்டுகள் பூர்த்தியையிட்டு இலங்கை மத்திய வங்கி 1,000 ரூபா நினைவு நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது. 500 தங்க நாணயக் குற்றிகளும் 2,000 வெள்ளி நாணயக் குற்றிகளும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு, மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு -வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு உறவுகளுக்கான சிறப்பு கௌரவமாக இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தின் மத்தியில் - இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்க்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றம் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் - ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "இலங்கை - சீனா 65 ஆண்டுகள்" என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் "சீன கம்யூனிஸ்ட் கட்சி" என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Thu, 07/08/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை