முதல் ஊசியை எவ்வளவு வேகமாக போடுகிறோமோ, அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசி கிடைக்கும்

- யாழ். ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன்

முதல்கட்ட தடுப்பூசியை நாம் எவ்வளவு வேகமாக போட்டு முடிக்கிறோமோ, அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகள் எமக்கு கிடைக்குமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.  

யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கொரோனா விடுதியை பார்வையிட்டதுடன் வைத்தியசாலை பணிப்பாளருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.  

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகமாக இருந்தபோதும் இப்போது பயணத்தடை காரணமாக குறைந்து வருகிறது. தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவையாக உள்ளன. அவற்றை சுகாதார அமைச்சுடன் பேசி பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிகளை எடுப்போம். ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் கொரோனா சிகிசைக்கான பணியாளர்களை உள்ளெடுக்க ஆலோசித்துள்ளோம்.  

நேற்றைய தினம் வருகைதந்த நாமல் ராஜபக்‌ஷ தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் முதல் கட்ட 50,000 தடுப்பூசி போடப்பட்டு முடிவடைந்தால் அடுத்த கட்டமாக மேலும் 50,000 தடுப்பூசி அனுப்ப முடியும் என தெரிவித்திருந்தார்.  

ஆகவே எவ்வளவு வேகமாக இந்த முதல்கட்ட தடுப்பூசியை நாம் போட்டு முடிக்கிறோமோ அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கும்.  
யாழில் 52 வீதமான மக்கள் முதல் நாளில் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மக்களுக்கான தேவையற்ற பயத்தைப் போக்க தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளாக நாங்கள் தெளிவூட்டல்களை செய்வதோடு அரச உத்தியோகத்தர்களும் அதனை செய்ய வேண்டும்.  

முதல்கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசி போடுவதற்கு 12 வார கால இடைவெளி உள்ளது. அந்த சீரான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்படும் என்றார்.      

Wed, 06/02/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை