மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும்; ஐ‌.நா. பொது கூட்டத்தில் தீர்மானம்

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம்திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மேலும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் பல மாதங்களாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மியான்மருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங் சான் சூகி உட்பட இராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் இராணுவ ஆட்சியை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலரஸ் நாடு மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. அதேசமயம் மியான்மருக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா மற்றும் ரஷ்யா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

Tue, 06/22/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை