நீதியை நிலைநாட்டுமாறு வியாழேந்திரன் அறிவுறுத்தல்

தனிப்பட்ட பகையோ கட்சி அரசியலோ இல்லை என்கிறார்

தனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தனது தனிப்பட்ட பகையோ, கட்சி சார்ந்த அரசியலோ இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு நகரில் மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்பாக திங்கட்கிழமை (21) இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் மன வேதனையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, நான் கொழும்பில் இருந்தேன்.தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும், நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாதிபர் உட்பட அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளேன் எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் நான் மிகுந்த வேதனையடைகிறேன். காலம் தாழ்த்தாது உரிய நீதி நியாயத்தை நாட்டக் கூடியதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன்.

அத்துடன் இந்த விடயத்தில் எனது தனிப்பட்ட பகையோ,கட்சி சார்ந்த அரசியலோ இல்லை என்பதையும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

 வெள்ளாவெளி தினகரன் நிருபர்

 

Wed, 06/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை