இஸ்ரேலில் மிகப்பெரிய தேர்தல் மோசடி பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேலில் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடைபெறுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. வேறு எந்தக்கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாததால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக உருவாக்கியுள்ளன.

இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இப்படி பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இடையே தற்போது கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெயர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரி கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை முன்னாள் மந்திரியான நஃப்தாலி பென்னெட் இடம்பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க 14-ம் திகதி இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் யெய்ர் லாப்பிட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி இஸ்ரேலில் ஆட்சியமைக்கும். யாமினா கட்சி தலைவரான நஃப்தாலி பென்னெட் இஸ்ரேலிய பிரதமராக பதவியேற்பார். இதன் மூலம் 12 ஆண்டுகளாக இஸ்ரேலிய பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு பதவி பறிபோகலாம்.

இந்நிலையில், இஸ்ரேலில் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடைபெறுவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tue, 06/08/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை