பயங்கரவாத தடுப்புச் சட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய அரசு நடவடிக்கை

வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

பயங்கரவாத தடுப்புச் சட்டம்: சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க திருத்தம் செய்ய அரசு தவறிவிட்டது; ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரிவித்துள்ளதற்கிணங்க மேற்படி மறுபரிசீலனை செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் அவற்றில் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமென அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் மீது

மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அத்தகைய சூழலில் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் பல ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் உட்பட கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கையின் சார்பில் கருத்துக்களை தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜூன் 10 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தமது வருத்தத்தை தெரிவிக்கின்றது.

இலங்கையின் நிலைமை தொடர்பாக, குறிப்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்ற தொனியில் மேற்படி தீர்மானம் உண்மைக்கு மாறான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் வெளிநாட்டமைச்சின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு காத்திரமான, நட்புறவு உரையாடலை இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2000 - 2021ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்பு செயற்பாட்டின் மூன்றாம் சுற்று மீளாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

கூட்டு ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் சம்பந்தப்பட்ட செயற்குழுக்கள் மற்றும் குழுக்கள் மூலம் மேலதிக புதிய விடயங்கள் வழங்கப்படுகின்றன.

இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் திருத்தம் செய்யும் நோக்கில் பின்வரும் அவதானிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு விரும்புகின்றது.

அதற்கிணங்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மையின மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச கடமைகளுக்கு அமைவாகவே உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில், தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் ஒரு அமைச்சரவை உப குழுவை நியமிப்பதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பதையும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துக் கொண்டுள்ளது. (ஸ)

பயங்கரவாத தடுப்புச் சட்டம்: சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க திருத்தம் செய்ய அரசு தவறிவிட்டது; ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவது அல்லது சர்வதேச நடைமுறைகளுடன் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்தவித அர்த்தமுள்ள செயற்பாட்டையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கு பதிலாக அதன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது. இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் நன்மைகளால் பல ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக ஆடைத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கிணங்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பல சிக்கலான பிரிவுகளை திருத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மேற்படி ஜிஎஸ்பி சலுகைகளை வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும்.

அத்தகைய கட்டுப்பட்டுள்ள நிபந்தனைகளை அலட்சியப்படுத்தியதால் இலங்கை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த முக்கிய சலுகைகளை இழக்கவுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ள போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துவது அல்லது சர்வதேச நடைமுறைகளுடன் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு அர்த்தமுள்ள செயன் முறையையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த தவறிவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்க்கட்சி என்ற வகையில் நடைமுறை தீர்வுகளை முன் வைக்காமல் தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்ட ஐக்கிய மக்கள் சக்தி விரும்பவில்லை.

சட்டத்துறையின் நிபுணர்கள் குழுவான சட்ட ஆணைக்குழு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் சட்ட வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு பயனுள்ள சட்ட ஆவணமாகும். சட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியானது இந்தப் பிரேரணைகளை பரிசீலிக்கின்ற நடவடிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளும்.

எமது மனித உரிமைசெயற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு களங்கம் ஏற்படாத ஒரு வலுவான அத்துடன் பயனுள்ள தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் பலமான நம்பிக்கையாகும் என்றும் அந்த கட்சி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/16/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை