உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

- புதிய சட்ட மாஅதிபர், பிரதமருடனான சந்திப்பில் தெரிவிப்பு  

நாட்டின் 48 ஆவது சட்ட மாஅதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார். 

சட்ட மாஅதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்தார். 

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார். 

அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்த சட்ட மாஅதிபர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். 

இதன்போது சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்ட மாஅதிபர், பழைய சட்ட மாஅதிபர் திணைக்கள கட்டிடத் தொகுதி தொல்பொருள் பழமையை கொண்டுள்ளது. ஆகையால் அக்கட்டிடத் தொகுதியை  புனரமைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர, மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கனேஷ் தர்மவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 

Tue, 06/01/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை