பராமரிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின்னர் சளி மாதிரி பெறப்பட்டு பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, குறித்த சிங்கத்துக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 8 வருடங்களாக வளர்க்கப்பட்டுவரும் 'தோர்' என்ற இந்த சிங்கம், கடந்த 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சிங்கத்துக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, சிங்கத்துக்கு பொறுப்பாக இருந்த மூவரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோர் வசித்து வரும் பகுதியில், இவ்வாண்டு கொண்டுவரப்பட்ட ஷீனா என்ற சிங்கமும், மேலும் 4 சிங்கங்களும் வசித்துவருகின்றன.
இந்த விலங்குகளுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
from tkn