இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் மண்சரிவு

- மழை தொடர்ந்தால் கட்டடத்தொகுதி சரிந்து விழும் அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலை கட்டடங்களுக்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்தில் பாரிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதியில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் பிரதான மண்டபத்துக்குள்ளே இருந்த வகுப்பறைகளுக்குள் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. வகுப்பறை சுவர்களிலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து மழை பெய்யுமானால் பாடசாலையின் கட்டடத்தொகுதி சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது.

இவ்விடயம் குறித்து பாடசாலை அதிபர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவர், பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், இவ் விடயம் தொடர்பாக மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

(அவிசாவளை நிருபர்)

Sat, 06/05/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை