தமது சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்

"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொதுக் காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என வண எல்லே குணவன்ச தேரர், கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள வழங்கிய பென்ஸ், ரேஞ்ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்களையும், ஆலய சொத்துக்களையும், சிறப்புரிமைகளையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி, பிரபல வண. தேரர்கள் முன்மாதிரியாக இந்த பணியை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு வண. தேரர்கள் இதை போதிக்க தேவையில்லை.

1999ஆம் ஆண்டில் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுக்காகவே தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது கடும் சொந்த உழைப்பினால் நான் தேடிப்பெற்ற பெறுமதியான சொத்துக்களையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருடத் தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டுப் போன பாடங்கள். விட்டுத் தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு வழிக்காட்ட பெரிய மதத்தலைவர் என்று எவருமில்லை. ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளையும், சிறப்புரிமைகளையும் பொது மக்களுக்காக அர்ப்பணியுங்கள். ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியை ஆரம்பித்து வையுங்கள். தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும். இந்நாடு உருப்படும். நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை போற்றி வணங்குவார்கள்.

 

Sat, 06/19/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை