அதிகரித்த விலைக்கு அரிசியை விற்றால் ஒரு இலட்சம் அபராதம்

தண்டப்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரிடமிருந்து அறவிடும் தண்ட பணத்தை 1 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, தண்டப் பணத்தை 1 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானத்துக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குள் அந்த யோசனையை பாராளுமன்றத்துக்கு அவசர சட்டமாக கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்களிடம் செய்து கொண்ட இரு தரப்பு இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மூன்று மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பிரதேசங்களில் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அரிசியின் விலையை நிலையான தன்மையின் பேணும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் தீர்மானத்துக்கு மாறாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணம் 2,500 ரூபாவாக காணப்படுகிறது. இத் தொகையை 01 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இத்தீர்மானத்தை செயற்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் இத்தீர்மானத்தை பாராளுமன்றில் அவசர சட்டமாக கொண்டு வர தீர்மானித்துள்ளோம் என்றார்.

Wed, 06/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை