இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து நேற்று(24) நாடு திரும்பினார்.
கடந்த மே 12ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று நாடு திரும்பியதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்
“பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பசில் தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமைய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளார் ” என நிமல் லான்சா செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நெருக்கடியை தனிப்பட்ட முறையில் கணக்கில் எடுத்துக்கொள்வார். மேலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க உறுதிபூண்டிருப்பார் என்றும் அவர் கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் பசில் ராஜபக்ஷ பொருளாதாரத்துக்கு பொறுப்பாக இருந்தார். அப்போது நாட்டின் பொருளாதாரம் மிகச்சிறந்த இடத்தில் இருந்தது. தற்போது நாம் அதை அடைய முடியும் என நம்புகிறோம்” என லான்சா மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா சென்று நாடு திரும்பியுள்ள பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்கு விமானநிலையத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
from tkn