பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை இப்போது கூற முடியாது

மாணவரது பாதுகாப்பு காரணிகளுக்கு முன்னுரிமை அளித்தே முடிவு

கொவிட் -19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குறிப்பிட முடியாது. பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதுடன் தற்போது செயற்பாட்டிலுள்ள தொலைநோக்கு கல்வி முறைமையை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைய முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகளை மேம்படுத்தும் செயற்றிட்டங்கள் தற்போது நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் உள்ளிட்ட பல நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள். இவர்கள் பெறும் சம்பளம் குறைவானதாக காணப்பட்டாலும் அவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் 25,000 முன்பள்ளி ஆசிரியர்கள் நன்மையடைவர்.

குடும்ப வறுமை காரணமாக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பிறரின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள். பிறரது பொறுப்பிலுள்ள பெரும்பாலான பிள்ளைகள் ஏதாவதொரு வழிமுறையில் சிறுவர் வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர்.இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமுள்ளன.

சிறுவர் சித்திரவதை குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை திருத்தியமைக்க நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கு கல்வி அமைச்சினூடாக பல ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம் என்றார்.

 

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை