இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான புதுப்பிக்கப்பட்ட Antonov (AN-32) ரக மூன்று விமானங்கள் இலங்கையை வந்தடைந்தது.
கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப் படைத் தளத்தை வெள்ளிக்கிழமை (11) இரவு வந்தடைந்த மேற்படி மூன்று விமானங்களையும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
ஏழு ஆண்டுகளாக பறக்க முடியாமல் செயலிழந்து தரையில் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த விமானங்களில் ஏன் - 32 ரக மூன்று விமானங்கள் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டலில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே புதுப்பித்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து கொண்டு விமானப் படையின் 2ஆவது ஸ்கொட்ரனின் கட்டளை அதிகாரியான குரூப் கெப்டன் பிரதீப் பியரட்ன தலைமையிலான 28 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 07ஆம் திகதி உக்ரைனிலிருந்து புறப்பட்டு துருக்கி, எகிப்து, சவுதி அரேபியாவின் ரியாத், மதீனா, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியா ஏழு விமான நிலையங்களை ஊடுருத்து 22 மணித்தியால பயணத்திற்கு பின்னர் 2021 ஜூன் 11ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப் படைத் தளத்தை வந்தடைந்த மேற்படி மூன்று விமானங்களையும் நேரில் பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளரும், விமானப் படைத்தளபதியும், விமானப்படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக பாராட்டுக்களை நேரில் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் விமானப் படைத் தளபதியினால் பாதுகாப்புச் செயலாளருக்கும், பாதுகாப்புச் செயலாளரினால் விமானப் படையின் 2ஆவது ஸ்கொட்ரனின் கட்டளை அதிகாரியான குரூப் கெப்டன் பிரதீப் பியரட்னவுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
ஸாதிக் ஷிஹான்
from tkn