எவ்விதமான காரணமும் இல்லாது மேல் மாகாணத்துக்குள் வந்த 245 வாகனங்கள்

மேல்மாகாணத்துக்குள் எவ்வித காரணமுமின்றி பிரவேசிக்க முற்பட்ட 245 வாகனங்களில் பயணித்த 266 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் இத்தகைய நபர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், தேவையின்றி மாகாண எல்லைகளை கடப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சட்ட விதிகளுக்கு புறம்பாக மாகாண எல்லைகளை கடக்க முற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. அதற்கமைய நேற்றுமுன்தினம் (21) திங்கட்கிழமை மேல்மாகாண எல்லையை கடக்க முற்பட்ட 245 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் பயணித்த 266 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவையாளர்களுக்கு மாத்திரமே மாகாணங்களை கடந்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் சுற்றுலாக்கள், யாத்திரைகள் மற்றும் உறவினர்களின் இல்லத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. மக்கள் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக தொடர்ந்தும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் , தேவையின்றி மேற்கொள்ளப்படும் பயணங்கள் ஊடாக வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/23/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை