12.5kg சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்தும் ரூ. 1,493 இற்கு

12.5kg சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்தும் ரூ. 1,493 இற்கு-LP Gas Price will Be Maintained as Rs 1493-9 Decision on June 21 Cabinet Meeting

- இவ்வார அமைச்சரவையில் பல்வேறு சட்டங்களை திருத்தம் செய்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மூலம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயுவை, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,493 ரூபாவுக்கு விற்க, அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும், லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனி ஆகியன, சந்தையில் தொடர்ந்தும் குறித்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு உற்பத்தித் துறையை மீள்கட்டமைத்தல் தொடர்பாக பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 யூன் மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எமது நாட்டில் வாயு உற்பத்தித் துறையில் ஈடுபடும் கம்பனிகளின் பிரதிநிதிகள், ஏற்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு எட்டப்பட்ட விடயங்களுக்கு அமைவாக அமைச்சரவை உப செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ்க்காணும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபை மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டுப் பாவனைக்கான எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனி தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்தல்
  • எரிவாயுக் கொள்வனவின் போது, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றை இரு கம்பனிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கும், அதற்காக அம்பாந்தோட்டை எரிவாயு முனையத்தைப் பயன்படுத்தல்
  • நாட்டுக்கு தேவையான திரவப் பெற்றோலிய வாயு (LPG) கொள்வனவுக்கான பெறுகை நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நடாத்திச் செல்வதற்காக லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனியின் பிரதிநிதிகள் அடங்கலாக குறித்த துறைசார் நிபுணத்துவ அறிவுகொண்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்
  • உப செயற்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொறிமுறையை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்தல்

2. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஜா-எல, ஏக்கல இல் அமைந்துள்ள கறுவாத்தோட்ட காணியை விடுவிப்பு ஒப்புதல் பத்திரத்தின் மூலம் உரித்து வழங்கல்
ஜா-எல பிரதேச செயலகப் பிரிவின், ஏக்கல கறுவாத்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள 23 ஏக்கர் 01 றூட் 16.5 பேர்ச்சர்ஸ் பரப்பளவு கொண்ட ஏக்கல தோட்டம் எனும் பெயரில் காணப்படும் காணியின் பயன்பாடு, காணிக் கையகப்படுத்தல் சட்டத்தின் 44 ஆம் உறுப்புரையின் ஏற்பாட்டின் கீழ், 2017 ஆம் ஆண்டு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை குறித்த காணி ஒப்புதல் பத்திரத்தின் மூலம் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு வழங்கப்படவில்லை. குறித்த காணியின் ஒரு பகுதி 50 வருடங்களுக்கு மேலாக இலங்கைப் போக்குவரத்துச் சபையால் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தற்போது ஜா-எல போக்குவரத்துச் சபையின் களஞ்சியமும் அமைந்துள்ளது. மேலும் 17 ஏக்கர்களில், அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனியிhல் பேரூந்துப் பெயர்ப்பலகைகள் தயாரித்தல் மற்றும் ஏனைய கருத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் வாகனங்கள் பழுதுபார்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான நிலையத்தை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்கு வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனி திட்டமிட்டுள்ளது. குறித்த கருத்திட்டம் உள்ளடங்கலாக இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் கம்பனியின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காகவும் குறித்த காணியைப் பயன்படுத்தக் கூடியவாறு விடுவிப்பு ஒப்புதல்; பத்திரத்தின் மூலம் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்கும், அரச – தனியார் பங்குடமை மூலம் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. உள்ளூர் கைத்தொழில்களை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்குமான ஆலோசனைக் குழுவொன்றை அமைத்தல்
நிரல் அமைச்சுக்கள் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறையின் பிரதிநிதிகளுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மை, கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் செயன்முறையில் பிரச்சினைகளும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. குறித்த தரப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கைத்தொழில்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பதற்கான இயலுமை இருப்பினும், இதுவரை அதுதொடர்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கைத்தொழில் துறையில் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி, 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த திருத்தங்கள் உள்வாங்கப்படும் வரை, 20 பிரதான கைத்தொழில் துறைகளின் வர்த்தக சபை/சம்மேளனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் குறித்த கைத்தொழில் துறையின் நிபுணத்துவர்கள் அடங்கலாக ஆலோசனைச் சபையொன்றை நியமிப்பதற்கு கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டத்திற்கான திருத்தங்கள்
தற்போது நடைமுறையிலுள்ள 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டம் மற்றும் ஏற்புடைய திருத்தங்கள் மூலம், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான அதிகாரங்கள் மாத்திரம் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. குறித்த சட்டத்தின் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்தால் ஆரம்ப சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பினும், சமகாலத் தேவைகளுக்கமைய குறித்த சட்டமூலம் மேலும் திருத்தப்பட வேண்டியமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி 1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டம் (திருத்தப்பட்டது) திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை திருத்தத்திற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காக 2018 செப்ரெம்பர் மாதம் 03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை மேலும் முறைமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளமையை சட்டமா அதிபர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் சமகாலத் தேவைகளுக்கமைய குறித்த சட்டமூலத்திற்கு மேலும் உள்வாங்கப்பட வேண்டிய ஏற்பாடுகளை வர்த்தக அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அதற்கமைய அடையாளங் காணப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் உள்வாங்கி, சட்ட வரைஞர் குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. உர முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குபடுத்தல்களை முறைப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் சட்ட வரையறைகளை காலத்தோடு தழுவியதாக பலப்படுத்தல்
உர உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விநியோகம் போன்றவற்றை முறைமைப்படுத்துவதற்காகவும் அதற்கு ஏற்புடைய விடயங்கள் தொடர்பாகவும் சட்ட ஏற்பாடுகளை விதிக்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு 68 ஆம் இலக்க உர முறைமைப்படுத்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் சில ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் போதுமாக இன்மையாலும், பொருத்தமற்ற வகையில் இருப்பதாலும் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. குறிப்பாக 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்கக் கொள்கைப் பிரகடனத்திற்கமைய சேதனப் பசளைப் பயன்பாட்டை நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையால், அது தொடர்பான ஏற்பாடுகளை சட்டத்தில் உள்வாங்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதனால் 1988 ஆம் ஆண்டு 68 ஆம் இலக்க உர முறைமைப்படுத்தல் சட்டத்திற்குப் பதிலாக சமகாலத் தேவைகளுக்கமைவான ஏற்பாடுகளை உள்வாங்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் (முற்கூட்டிய வழக்கு விசாரணை நடைமுறைகள்)
மேல் நீதிமன்றங்களில் முற்கூட்டிய வழக்கு விசாரணைகளை நடாத்துதல் தொடர்பாக புதிய ஏற்பாடுகளை அறிமுகஞ் செய்வதற்காக 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வருவதற்காக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 'தேசிய எரிசக்தி தினம்' பிரகடனப்படுத்தல்
மின்சக்தி அமைச்சு, எரிசக்தி அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சூரிய மின், காற்றாலை மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சும் இணைந்து நிலைபெறுதகு எரிசக்தி தொடர்பாக பாடசாலை மாணவர்களின் அறிவு, மனப்பாங்கு மற்றும் ஆக்கத்திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதான தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்குச் சமாந்தரமாக ளுளு ர்நடழைள எனும் பெயரிலான அணுசக்திக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்த போது, மின்குமிழ் ஒளியை முதன் முதலாக இலங்கையர்கள் கண்டுகொண்ட தினமான 1882 ஆம் ஆண்டு யூன் மாதம் 26 ஆம் திகதியை கருத்தில் கொண்டு, வருடாந்தம் யூன் மாதம் 26 ஆம் திகதி 'தேசிய எரிசக்தி தினமாகப்' பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு வருடமும் யூன் மாதம் 26 ஆம் திகதி 'தேசிய எரிசக்தி தினம்' பிரகடனப்படுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை ஒவ்வொரு வருடமும் யூன் மாதம் 26 ஆம் திகதியன்று ஆரம்பித்து அடுத்த வருட யூன் மாதம் 26 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு தேசிய பரிசளிப்பு விழாவில் நிறைவு பெறச் செய்வதற்கும், மின்சக்தி அமைச்சரும் எரிசக்தி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் வேலூர் தொழிநுட்ப நிறுவகத்திற்கும் (Vellore Institute of Technology, India) இடையேயான ஒப்பந்தம்
ஆரம்ப பட்டப்படிப்பு மற்றும் பட்டபின் படிப்பு நிகழ்ச்சிகளுக்கான மாணவர் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளல், கற்பித்தல் ஆய்வுகள் மற்றும் பிரயோக ரீதியான பயிற்சிகள் தொடர்பாக பரஸ்பர அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கல்விசார் ஊழியர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், வெளியீடுகள் மற்றும் அறிக்கைகளைப் பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் மூலம் கல்வி ஒத்துழைப்புக்களுக்காக உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் வேலூர் தொழிநுட்ப நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tue, 06/22/2021 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை