முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருக்கின்றவர்கள் வருமானம் இல்லாத காரணத்தால் உணவின்றி பல நாட்கள் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹற்றன் போடைஸ் தோட்ட மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரி நேற்று (12.05.2021) ஆர்ப்பாட்டமாென்றை முன்னெடுத்துள்ளனர். ஹற்றன் – டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து என்பீல்ட் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டத்திற்கு பயண தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் நேற்று (12.05.2021) காலை பயணத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து போடைஸ் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எனவே கடந்த பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாம் தோட்ட தொழிலையும் இழந்து வருமானமில்லாது அவதிப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மேற்படி பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துபேசி தீர்வை பெற்று தருவதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒன்று கூட முடியாது எனவும் பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதேவேளை இன்ஜஸ்ரி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ஹொன்சி நகரம் புளியாவத்த, பேன்போட் ஆகிய தோட்ட பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் இன்ஜஸ்ரி, பிலிங்போனி ஆகிய தோட்டங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது.

ஒரு கிராமமோ அல்லது பெருந்தோட்ட பகுதியோ முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீடுகளில் இருக்கின்ற அனைவருக்கும் இந்த நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாது.

கொரோனா தொற்று உறுதியானவர்களின் குடும்பங்களுக்கும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் 10000.00 ரூபா பெறுமதியான உதவித் தொகை அல்லது அந்த பெறுமதிக்கான உலர் உணவு பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.

அது தவிர ஒரு குறிப்பிட்ட பகுதி 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்படுமாக இருந்தால் அந்த பகுதியில் இருக்கின்றவர்களுக்கு வாரத்திற்கு 5000.00 ரூபா வீதம் பெற்றுக் கொடுக்கப்படும்.எனவே இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருக்கின்றவர்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அவர்கள் அங்கிருக்கும் குடும்ப நல உத்தியோகஸ்தருடன் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கான ஒரு ஏற்பாட்டை அவர் அந்த பகுதியில் இருக்கின்ற ச.தொ.ச ஊடாக ஏற்பாடு செய்து தருவார் என அவர் தெளிவுபடுத்தினார்.

ஹற்றன் சுழற்சி நிருபர், நுவரெலியா தினகரன் நிருபர்

Thu, 05/13/2021 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை