தொற்றுக்குள்ளாகும் இந்து குருமாருக்கு விசேட தனிமைப்படுத்தல் நிலையங்கள்

பாபு சர்மாவின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் செவிசாய்ப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்படுகின்ற இந்துமத சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்கின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரின் இந்து மத விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு  வரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டிருக்கின்ற சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.

இதன்போது, சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேவேளை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில் தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான தொகுதி ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

 

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை