மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மீது குண்டு வைத்த சந்தேக நபர் கைது

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீதான படுகொலை முயற்சியுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை கைது செய்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் மாலியில் தனது வீட்டுக்கு வெளியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 53 வயதான நஷீட் மோசமாக காயத்திற்கு உள்ளானார். இந்த தாக்குதல் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 வயதான அப்துல்லாஹ் அஹ்மது ரஷீத் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நஷீட்டின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர். கடந்த மே 6 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் பிரிட்டன் நாட்டவர் ஒருவருடன் மேலும் இருவரும் காயமடைந்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் நஷீடின் காருக்கு அருகில் வெடிக்கச் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் குண்டை வைப்பதற்கு முன்னர் அங்கு மற்றொருவருடன் காத்திருக்கும் காட்சிகள் சி.சி.டீ.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

மதக் கடும்போக்காளர்களாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைது செய்வதற்கு மாலைதீவு பொலிஸார் தொடர்ந்து விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆடம்பர சுற்றுலாத் துறைக்கு பிரபலம் பெற்ற மாலைதீவில் அரசியல் பதற்றம் மற்றும் இஸ்லாமியவாதிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய நிலையில் நான்கு ஆண்டுகளில் சதி ஒன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட நஷீட், தற்போது நாட்டின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவியான சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார். அவர் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பவராகவும் உள்ளார்.

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை