மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் நலன் விசாரிப்பு

குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட்   தொடர்பில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நேற்று நலன் விசாரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தைக்கு நேற்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  மொஹமட் நஷீட்  விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார். கடந்த ஆறாம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.

குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் மாலைத்தீவின் ஜனாதிபதியாக மொஹமட் நஷீட் இருந்தார். அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவராவார்.

Wed, 05/12/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை