பைடனின் போர் நிறுத்த அழைப்புக்கு இடையே தொடர்ந்து உக்கிர தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் நேற்றும் உக்கிர வான் தாக்குதல்களை தொடர்ந்தது.

கடந்த மே மாதம் மோதல் வெடித்தது தொடக்கம் மூன்றாவது முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த பைடன், போர் நிறுத்தம் ஒன்றுக்கான தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். எனினும் வன்முறைகளை நிறுத்துவதற்கான கோரிக்கையை விடுக்க பைடன் தவறியுள்ளார்.

காசா மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை நேற்றுக் காலை வரை 212 ஆக அதிகரித்திருந்தது. இதில் 61 சிறுவர்கள் அடங்குகின்றனர். சுமார் 1,500 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டிருப்பதோடு குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

போரை நிறுத்துவதற்கு எகிப்து மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயற்பட்டு வருவதாக நெதன்யாகுவிடம் பைடன் தெரிவித்துள்ளார்.

எனினும் வன்முறையை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபை அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா மீண்டும் ஒரு முறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த பின்னணியில் இஸ்ரேல்-காசா மோதல் தணிவதற்கான எந்த சமிக்ஞையும் இன்றி இரண்டாவது வாரத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் உடனடியாக இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு தரப்பு மோதல்களால் அமைதியாக வாழும் மக்கள்தொகையில் சிறார்கள் உட்பட பலரும் இறப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனும் போர்நிறுத்தம் ஒன்றுக்காக எகிப்து ஜனாதிபதி மற்றும் ஜோர்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்போது, தமது இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொள்ளும் அழுத்தம் இஸ்ரேலுக்கு பல நிலைகளில் இருந்தும் வருகின்றன.

இதேவேளை, ஹமாஸ் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், இம்முறை முன்பை விட தீவிரமாக உள்ளது. அவர்களால் இஸ்ரேலின் தாக்குதலை தாக்குப்பிடிக்கவும் முடிகிறது. இத்தகைய சூழலில்தான் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் இது இஸ்ரேல், காசா விவகாரத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் புதிய அணுகுமுறையின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் போர் நிறுத்தத்திற்கான எதுவும் தற்போது முன்வைக்கப்படவில்லை என்று மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “இப்போதைக்கு அது போன்ற ஒன்று இடம்பெறவில்லை. அது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. எந்த முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை. எதுவும் முன்வைக்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் இஸ்ரேல், காசா மீது தனது வான் தாக்குதல்களை தொடர்ந்தது. இதில் அங்குள்ள இரு கட்டடங்கள் தரைமட்டமாகின.

புதிய நடவடிக்கையில் ஹமாஸின் 15 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு சுரங்கப்பாதை அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பில் உடன் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இதுபோன்ற வான் தாக்குதல்களில் காசா பகுதியின் வீதிகள், மின்சார அமைப்பு மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டதோடு ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை வைப்பதற்கு போதுமான பிரேத அறைகள் கூட எம்மிடம் இல்லை என்று காசாவைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் முஹமது அபூ ரெய்யா பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

‘காசாவில் இப்போது ஏற்பட்டிருக்கும் அழிவுகளை சரிசெய்ய எமக்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றுக் காலை காசாவில் உள்ள பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேலின் தெற்கு நகரங்களில் சைரன் ஒலி எழுப்பப்பட்டதோடு மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர். எனினும் முந்தைய இரவை விடவும் ரொக்கெட் தாக்குதல்கள் குறைவாக இருந்ததாக பிராந்தியத்தில் இருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்குக் 3,000க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக குறிப்பிடும் இஸ்ரேல், காசா மீதான நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் 90 வீதமான ரொக்கெட்டுகளை இடைமறித்தாக கூறுகிறது. இந்த ரொக்கெட் தாக்குதல்களால் ஆறு பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகியும், மூன்று குழந்தையின் தந்தையுமான எலிடன் சிங்கர் நிலைமை குறித்து பி.பி.சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘தொடர்ச்சியாக ஏழு நாட்களான நாம் உறங்கச் செல்லும்போது ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு இரவும் குழந்தைகளை படுக்கையில் இருந்து எழுப்பி பாதுகாப்பு இடத்தை நோக்கி ஓடுவது இலகுவானது அல்ல. 30 தொடக்கம் 60 வினாடிகளுக்குள் அவ்வாறான பாதுகாப்பு இடத்தை நாம் அடைய வேண்டும்’ என்றார்.

காசாவுக்கு அப்பாலும் இஸ்ரேல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. லெபானானில் இருந்து இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலை நோக்கி ஆறு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.

ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஆளில்லா விமானம் ஒன்றை இஸ்ரேல் நேற்று சுட்டுவீழ்த்தியது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி பலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றுள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே இந்த பதற்றத்தை ஒட்டி மேற்குக் கரையில் 23 பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கும் அரபு நகரங்கள் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் நேற்று பொது வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பலஸ்தீன நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த சில வாரங்களில் நிலவிய பதற்றத்தை அடுத்தே காசா போராளிகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 05/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை