கடலுணவுகளை உட்கொள்ள எவ்வித அச்சமும் தேவையில்லை

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு கொழும்பு, நீர்கொழும்பு கடலில் மீன்பிடிக்கத் தடை

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லையென்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"இதுவரையில், இச் சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்திலிருந்து சம்பந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாகக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் (நாரா ) ஈடுபட்டுள்ளது.

ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்பந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு போன்ற சந்தேகிக்கக்கூடிய கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Fri, 05/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை