சகல வணக்கஸ்தலங்களிலும் சனியன்று விசேட வழிபாடு

சர்வமதத் தலைவர்கள் மக்களிடம் கோரிக்கை

உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்று நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர, உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டிச் சர்வமத பிராத்தனையினை ஒரே நேரத்தில் நாளை சனிக்கிழமை 08.05.2021 ஆம் திகதி மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி,பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து விவகாரங்களுக்கான கலாநிதி சிவ சிறி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கங்காராம விகாரையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்து ஆலயங்கள் அனைத்திலும் சனிக்கிழமை மாலை 5.46 மணியளவில் மிருத்யுஞ்சய ஹோமம் சகல ஆலயங்களிலும் குறிப்பாக பஞ்ச ஈஸ்வர தலங்களிலும் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தலால் அன்று பூஜை வேளையில் நீங்கள் வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. கொரோனா இலங்கையை விட்டு நீங்க வேண்டும். முழு உலகத்தை விட்டும் நீங்க வேண்டும். கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும். எல்லோரும் வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்று இறைவனை மனதார நாம் அனைவரும் ஒருமித்து பிரார்த்திப்போம். இந்த பிரார்த்தனை மூலம் நாங்கள் இந்த கோரோனாவிலிருந்து விடுபட வேண்டும் எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாக இது அமைய வேண்டும். சகல ஆலயங்களிலும் மாலை 5.46 மணியளவில் செய்வது மிகவும் சிறந்த நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்நேரத்தில் தீபமேற்றி பிரார்த்தித்து, இந்த மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெறும் போது பக்தி பூர்வமாக பிரார்த்தனை செய்யவும். இதற்கான அறிவுறுத்தலை இந்து கலாசார திணைக்களம் அறிவிக்கும் என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான பிரதமரின், இந்த மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ சிறி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

 

Fri, 05/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை