யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் பணிப்பு!

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் பணிப்பு!-Namal Rajapaksa at Jaffna Vaccination Programme

- இன்று காலை ஆரம்பமானது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு

யாழ். மாவட்டத்தில்  பொதுமக்களை  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால்    தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று ஆரம்பமானது.

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசி மருந்துகள், வடக்கு மாகாண ஆளுநரால்  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு நாமல் பணிப்பு!-Namal Rajapaksa at Jaffna Vaccination Programme

யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், பிரதமரின் வடக்கிற்கான இணைப்பாளர், யாழ் மாவட்ட அரச அதிபர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.

இன்று (30) காலை 8.00 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கும் செயற்பாடு  முன்னெடுக்கப்படுகிறது.

இதைவேளை இதே தொடர்பாக யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும், கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ளன. 

முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க கோரிக்கை விடுத்தேன். 

இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை  பெற்றுக் கொள்வதில் சிரமம்  ஏற்படும். எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளை கோரியுள்ளார்.

அத்துடன்,  பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்க மாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சரின் விஜயத்தின் போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு ஆளுநர் யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத்தளபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்சன் வினோத், ஐங்கரன் சிவசாந்தன், யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Sun, 05/30/2021 - 17:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை