காற்றில் வேகமாக பரவும் அபாயம்
இந்தியா மற்றும் பிரிட்டன் திரிபுகளின் கலவையான காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய கொரோனா திரிபு ஒன்று வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திரிபினை 'பெரும் ஆபத்துக்கொண்டது' என்று வியட்நாம் சுகாதார அமைச்சர் நுயேன் தன் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ்கள் எப்போதும் தம்மை மாற்றம் செய்துகொள்வதோடு பெரும்பாலான திரிபுகள் அதிக தாக்கம் இல்லாதவையாக இருந்தபோதும் சிலது அதிக வீரியம் கொண்டதாக மாறும் ஆபத்து உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் கொவிட்-19 தொற்று முதல் முறை அடையாளம் காணப்பட்ட பின், ஆயிரக்கணக்கான புதிய திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“வியட்நாமில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் வகை, பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகை என இரண்டு வைரஸின் தன்மைகளையும் கலந்த ஒரு புதிய கொவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளது” என அரசாங்க கூட்டம் ஒன்றில் வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை, பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த வகை வைரஸ் குறித்துத் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்ததாக இணைய செய்தி வலைதளமான வி.என் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை வைரஸின் மரபணு குறியீடு விரைவிலேயே கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்தது. அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர்கள் உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அது புதிய வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடும்.
வியட்நாமில் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெருந்தொற்று பரவல் ஆரம்பித்து இன்றுவரை அந்நாட்டில் 6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பாதிக்கு மேல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பாதிக்கப்பட்டவர்கள்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் தரவுகள்படி வியட்நாமில் இதுவரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிகிறது.
குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 இலட்சத்து 22 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 5 இலட்சத்து 94 ஆயிரத்து 304 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
from tkn