இஸ்ரேலின் காசா மீதான உக்கிர தாக்குதல் நீடிப்பு; பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியது

பாதுகாப்பு சபையில் அமெரிக்கா முட்டுக்கட்டை

காசா மீது இஸ்ரேல் நேற்றும் உக்கிர வான் தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீதான ரொக்கெட் குண்டுகளை வீசி வரும் நிலையில் இந்த மோதல் இரண்டாவது வாரத்தை தொட்டுள்ளது.

நேற்று சூரியோதத்திற்கு முன்னர் இந்த மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.

ஹமாஸ் குழுவுக்கு சொந்தமான தளங்கள் மற்றும் அதன் தளபதிகளின் வீடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் காசாவின் பிரதான வீதிகள் மற்றும் மின்சார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழைப்பும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதோடு, இந்த மோதல் தொடர்ந்தால் கட்டுப்படுத்த முடியாத பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

இந்த பயங்கர வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுபுறம் போர் நிறுத்தம் ஒன்றை அடைவதற்கு தமது நாடு நீண்ட முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக எதிர்பார்ப்பதாகவும் எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி நேற்று தெரிவித்தார்.

எனினும் இந்த மோதல் தணிவதற்கான எந்த சமிக்ஞையும் இதுவரை வெளியாகவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பதற்றத்தை அடுத்தே தற்போதைய மோதல் வெடித்தது. புனித அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அந்த பகுதியில் இருந்து இஸ்ரேல் பொலிஸாரை வெளியேறும் படி காசவை ஆளும் ஹமாஸ் அமைப்பு கெடு விதித்திருந்தது. அந்தக் காலம் முடிவுற்றதை அடுத்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்த அது இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொள்ள தூண்டியது.

நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் காசா மீது 50 போர் விமானங்கள் 20 நிமிடங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

35 தீவிரவாத இலக்குகள் மற்றும் ஹமாஸின் 15 கிலோமீற்றர் சுரங்கப்பாதையை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்தது.

ஒன்பது உயர்மட்ட ஹமாஸ் தளபதிகளின் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி உடன் உறுதி செய்யப்படவில்லை. எனினும் இந்தத் தாக்குதால் காசாவில் பரந்த அளவில் மின் வெட்டு ஏற்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘இந்த அளவில் இதற்கு முன்னர் தாக்குதல் இடம்பெறவில்லை’ என்று காசா குடியிருப்பாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின்போது பயம் மற்றும் அச்சத்தை சந்தித்ததாகவும் 39 வயதான மாத் அபத் ரப்போ குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு குடியிருப்பாளரான சாரா மஹ்மூத் கூறும்போது, ‘நாம் தொடர்ந்து உயிர்வாழ்கின்றபோதும் நன்றாக இல்லை. போர் விமானங்கள் காசாவின் அழகான வீதிகளை அழித்து விட்டன’ என்றார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று காலை வரை 198 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58 சிறுவர்கள் மற்றும் 34 பெண்களும் அடங்குகின்றனர். இதுவரை 1,300 பேர் காயம் அடைந்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலையில் தெற்கு இஸ்ரேலிய நகரங்களான பீர்ஷபா மற்றும் அஷ்கெலோன் நகரங்கள் மீது பலஸ்தீனிய போராளிகள் சரமாரியாக ரொக்கெட் குண்டுகள் வீசினர்.

இந்த ரொக்கெட் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேலில் இரு குழந்தைகள் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து இதுவரை 3,000க்கும் அதிகமான ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றதாக இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதில் 90 வீதமான ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு முறையான அயர்ன் டோர்ம் அமைப்பு தெரிவித்தது. எனினும் இந்த ரொக்கெட் குண்டுகளால் யூதர்களின் மதத் தலம் ஒன்று உட்பட கார் வண்டிகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் அதிக உயிரிழப்பு பதிவான நாளாக மாறியது. நள்ளிரவுக்கு சற்று நேரத்திற்கு பின் காசாவில் பரபரப்பான வீதி ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது மூன்று கட்டடங்கள் இடிந்தன.

அந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்பாளர்கள் போராடினர். அந்த விமானத் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் அறிவித்தனர்.

காசாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மருத்துவமனைகள் மற்றும் ஏனைய வசதிகளில் மின்சார துண்டிப்புக்கு காரணமாகலாம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்த மோதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் இணக்கம் ஒன்றை எட்ட பாதுகாப்பு சபை தவறி வரும் நிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்திலும் இந்த நிலை தொடர்ந்தது.

இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா அவ்வாறான அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

பாதுகாப்பு சபை ஒரே குரலாக ஒலிப்பதற்கு இடையூறு செய்வது பற்றி அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தற்காப்பு உரிமை பற்றி வெளிப்படையாக தனது உறுதியான ஆதரவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட நிலையில், மோதலை நிறுத்துவதற்கு அனைத்து தரப்புடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளதார்.

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை