கொட்டகலை, டிறேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 17 பேரும் ஆண்கள் என்பதோடு, அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (23) அதிகாலை முதல் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் இன்றும் வேலைக்குச்சென்றனர்.
இவ்வாறு கொழுந்து மலைக்குச்சென்று கொழுந்து கொய்துவிட்டு, கொழுந்தின் அளவை, பொதுவெளியில் வைத்து அளவிடுகையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதையடுத்து பாதிக்கப்பட்ட 17 ஆண் தொழிலாளர்களும் சுயநினைவை இழந்தனர் எனவும், அதிர்ச்சியால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் சிலருக்கு சுடுகாயம் ஏற்பட்டுள்ளதோடு, மேலும் சிலர் தப்பி ஓட முற்பட்டு சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
திம்புள்ள - பத்தனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், லிந்துலை நிருபர் - சுஜித் சுரேன், நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)
from tkn