- முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் சம்பவம்
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று (15) மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் மூவர் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இரவாகியும் இவர்கள் விடு திரும்பாத நிலையில் இவர்களை தேடி உறவினர்கள் விவசாயிகள் சென்றவேளை வயல்நிலத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலீசார் வருகை தந்தனர்.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 36 வயதான கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த 30 அகவையுடைய சிவசிதம்பரம் யுகந்தன், வற்றாப்பளை கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய யோகலிங்கம் சுஜீவகரன் ஆகிய குடும்பஸ்தர்களே இதில் உயிரிழந்தவர்களாவர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடையவியல் பொலீசார் சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையாகி நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - கீதன், மாங்குளம் குறூப் நிருபர் - சண்முகம் தவசீலன்)
இடி மின்னல் வேளைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வெட்டவெளியில் அல்லது மரத்தின் கீழ் நிற்க வேண்டாம். பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் இருக்கவும்.
- வயல்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதைத் தவிருங்கள்.
- கம்பி இணைப்புடனான தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.
- துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
- கடும் காற்றின் காரணமாக, மரங்கள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து வீழ்வதற்கு வாய்ப்புக் காணப்படுவதால் அது தொடர்பில் அவதானமாக இருங்கள்.
- அவசர நிலையின் போது, குறித்த பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியின் உதவியை நாடுங்கள்
from tkn