இலங்கை வரலாற்றில் முதலாவது பல்கலைக்கழக பெண் பீடாதிபதியும் இலங்கையின் முதலாவது தமிழ் பெண் பல்கலைக்கழக வேந்தருமான வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் கொழும்பில் திங்கட்கிழமை காலமானார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் நீண்ட நாட்கள் கடமையாற்றிய பேராசிரியர் யோகா இராசநாயகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதியாக நியமனம் பெற்றதன் மூலம், இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு ஹவ்லொக் வீதியில், வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் வேந்தராக நியமிக்கப்பட்டதை கௌரவித்து வேந்தர் வீதி என்று விசேட பெயர் சூட்டப்பட்ட வீதியில், 413/2C என்ற இலக்கத்தில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து வந்தார்.
from tkn