சிவராமின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நினைவு நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் பாராளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதேபோல், ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந் நினைவு நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலம்பெற வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது.

Fri, 04/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை