இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கவுள்ள சுகாதார அபிவிருத்தி

- அமைச்சர் பவித்ரா, இந்திய உயர்ஸ்தானிகருடன் விரிவாக ஆராய்வு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம் இலங்கையில் விரைவாக பல சுகாதார அபிவிருத்திட்டங்களை இந்தியா மேற்கொள்ள முன்வந்துள்ளமைக்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுகாதார அபிவிருத்திட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. 

இதன்போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் மோடிக்கு தமது நன்றியை தெரிவித்ததுடன், இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் சுகாதார அபிவிருத்திட்டங்கள் குறித்தும் ஆழமாக ஆராய்ந்தனர். 

இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் இருதயவியல் பிரிவை நிறுவுதல், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் மகப்பேறு வளாகத்தை அமைத்தல், தங்காலை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை வளாகத்தை அமைத்தல் மற்றும் தெஹியத்தக்கண்டி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய பிரதமரின் ஒத்துழைப்புகளுக்கு சுகாதார அமைச்சர் அரசாங்கத்தின் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு விளக்கமளித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Fri, 04/02/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை