- 2020 புதிய திருமதி அழகி அயர்லாந்தின் கேட் ஷ்னைடர்
திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி தனது 2020 திருமதி உலக அழகி பட்டத்தை இழந்துள்ளார்.
திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் இராஜினாமாவை ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ள, திருமதி உலக அழகிப் போட்டி அமைப்பானது, அப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அயர்லாந்தின் கேட் ஷ்னைடர், 2020 புதிய திருமதி உலக அழகியாக தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள திருமதி உலக அழகிப் போட்டி அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
கரோலின் ஜூரி அனுப்பியுள்ள இராஜினாமா தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவ்வமைப்பு, தானாக முன்வந்து மேற்கொண்டுள்ள அவரது இராஜினாமா முடிவானது, முற்றிலும் அவரது சொந்த முடிவு எனவும் தெரிவித்துள்ளது.
கரோலின் ஜூரி மற்றும் அவரது குடும்பத்தினர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக, திருமதி உலக அழகிப் போட்டி அமைப்பு விடுத்துள்ள குறித்த ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், குறித்த போட்டியில் இரண்டாம் இடத்திற்கு தெரிவான அயர்லாந்தின் கேட் ஷ்னைடர் (Kate Schneider) புதிய 2020 திருமதி அழகியாக தெரிவாகியுள்ளதாக அவ்வமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை திருமதி அழகி போட்டியின் போது நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில், திருமதி அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுடனான முறுகல் நிலை சுமூகமாக முடிவுக்கு வராத நிலையில், அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (20) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் மாடல் அழகி ச்சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் தலா ரூ. 100,000 ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn