புதிய அரசியலமைப்பில் மதமாற்ற தடை சட்டத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை

- அக்கரைப்பற்றில் உண்ணாவிரத போராட்டம்

புதிய அரசியலமைப்பில் மதமாற்ற தடைச்சட்டத்தை இயற்றுவதுடன்,   பசுவதையினை உடன் நிறுத்துமாறும், சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம் நேற்றுமுன்தினம்  (10) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில்  ஆரம்பமான குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் சிவசேன அமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ரி.ஜெயாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தவத்திரு விபுலானந்தா அடிகளாரின் 119ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவசேன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பிற்பாடு அடையாள உண்ணாவிரத நிகழ்வின் நோக்கம் பற்றி பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தனர்.

ஜனாதிபதி மதத்தினை மதிக்கும் பக்குவம் கொண்டவர். அவர் மீது பூரண நம்பிக்கையும் எமக்குள்ளது. ஆகவே அவரது காலத்தில் மதமாற்ற சட்டத்தை உருவாக்கி இந்து மதத்தை மாத்திரமன்றி அனைத்து மதங்களின் உரிமையினையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

எல்லா மதங்களும் ஒருமித்து வாழும் எமது நாட்டில் சில மதத்தவர் மக்களிடம் உள்ள ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார நிலையினை காரணம் காட்டி அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். இது தவறான செயற்பாடாகும்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

 

Mon, 04/12/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை