மியன்மாரில் நீடிக்கும் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வர்த்தகத் தலைநகரான யங்கோனில் சீனாவுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று தீவைக்கப்பட்டிருப்பதோடு செயற்பாட்டாளர்கள் சீன தேசிய கொடியை எரித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சிவில் ஒத்துழையாமை போராட்டம் மியன்மாரை அழித்துவிட்டது என்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரான போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எணிக்கை 580 ஆக அதிகரித்துள்ளது என்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவம் பலப்பிரயோத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆங் சான் சூச்சியின் சிவில் அரசை மீண்டும் கொண்டுவரக் கோரி தென்மேற்கு நகரான காலேவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
from tkn