சபை ஒத்திவைப்பு வேளை; பின்வரிசை உறுப்பினர்களுக்கு கேள்வி எழுப்புவதற்கு சந்தர்ப்பம்

அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கு கேள்வி எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். 

சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்ட தினங்களில்,அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மணித்தியால நேரத்தில் 20நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் இரண்டு கேட்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். 

சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களில், முறையாக ஆளும்  கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினருக்காக ஒரு கேள்வி விகிதம் இரண்டு கேள்விகளுக்கு மாத்திரம்  சந்தர்ப்பம் வழங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.  உரிய உறுப்பினருக்கு கேள்வியை கேட்பதற்கு 5நிமிடங்கள் வழங்கப்படுவதுடன், உரிய அமைச்சர்  பதிலளிப்பதற்கு 5நிமிடங்களும் ஒதுக்கப்படும்.  சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த 

விடயங்களுக்குமாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதுடன், குறித்த கேள்வி அவசர பொது முக்கியத்துவம்   வாய்ந்த விடயங்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பில் சபாநாயகரினால் தீர்மானிக்கப்படும். 

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வியை தனிப்பட்ட ரீதியிலோ, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் உரிய பிரதம இணைப்பாளருக்கு முன்வைக்க முடியும் என்பதுடன், உரிய உறுப்பினர்கள் அதில் தமது கையொப்பத்தை இடல்   வேண்டும். 

அவ்வாறான ஒரு கேள்வி உரிய பிரதம இணைப்பாளர் மூலம் குறிப்பிட்ட தினத்துக்கு முந்தைய தினம்   முற்பகல் 10மணி அளவில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுடன், உரிய அமைச்சருக்கு முறையாக அறிவிக்கும் வகையில் பாராளுமன்ற செயலாளர்  நாயகம் அந்த கேள்வியை நண்பகல் 12மணிக்கு முன்னர் பாராளுமன்ற சபை முதல்வரின்செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும். 

அவ்வாறான ஏதேனுமொரு கேள்விக்காக சபையில் பதிலளிப்பதற்கும் அல்லது பதிலளிக்காமல்   இருப்பதற்கும், விரிவான தகவல்களை திரட்டும் வகையில் நீண்ட பதிலையுடைய கேள்வி ஒன்றாயின்   அதனை வாய்மூல விடைக்கான கேள்வியாக பட்டியலிடுவதற்கு கோரிக்கை விடுப்பதற்கும் உரிய  அமைச்சருக்கு முடியும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்,   சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 04/06/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை