யாழ். நகர எல்லைக்குள் வீதிகளில் எச்சில் துப்பினால் இரண்டாயிரம் ரூபா அபராதம்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாவும், வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல்படை எனும் பெயரில் 05உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள், யாழ் மாநகரின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் வீதிகளில் குப்பை போடுபவர்கள், வீதிகள், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்ந்துவிட்டு எச்சில் துப்புபவர்கள், தூய்மையை சரி வரப் பேணாதவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வீதி மற்றும் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000ரூபாவும், மீண்டும் தவறிழைத்தால் 4000ரூபா வரையும் தண்டம் அறவிடப்படும்.  வீதிகள் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 5000ரூபாவும் மீண்டும் செய்தால் 10,000ரூபா தண்டமும், அத்துடன் பொது இடங்களில் மலசலங்களைக் கழிப்பவர்களுக்கு 5000ரூபாவும் மீண்டும் செய்தால் 10,000ரூபாவும் தண்டமாக அறவிடப்படும்.

இந்த நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏற்றவகையில் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றார்.

யாழ். விசேட நிருபர்

Thu, 04/08/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை