தோட்ட தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் தோட்ட நிர்வாகம்

ஜீவன் கடும் கண்டனம்; தொழில் ஆணையருக்கு அவசர கடிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பெருந்தோட்டங்களில் நிலுவைக்கு மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கும் எடுக்கப்படும் இறப்பருக்கும் மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க நிர்வாகம் மறுத்திருக்கின்றது.

இது ஒரு கண்டனத்துக்குரிய செயற்பாடென இ.தொ.கா. பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் அனைத்து கம்பனிகளும் தேயிலைக்கும், இறப்பருக்கும் வழங்கப்படும் மேலதிக நிறைக்கொடுப்பனவை மார்ச் மாதத்தில் வழங்க மறுத்திருக்கின்றன.

தினசரி பறிக்கப்படும் மேலதிக கொழுந்துக்கும் இறப்பருக்கும் 40வீதம் வழங்கப்படுவது வழக்கமாகும். மார்ச் மாதம் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு அரச வர்த்தமானி அறிவித்தலூடாக சம்பளம் அதிகரித்ததன் காரணமாக தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவை வழங்க கம்பனிகள் மறுத்திருக்கின்றன.

தாங்கள் ஒரு பொறுப்புவாய்ந்த அதிகாரி என்ற முறையில் இதற்கான ஒரு காத்திரமான தீர்வை மேற்கொள்வதன் மூலம் தொழிலாளர்களுக்கு இந்த மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க ஆவண செய்யுமாறு நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாக சட்டத்தரணி கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

 

Fri, 04/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை