விபத்தில் உயிரிழந்தவருக்கு நீதி கோரி பிரதேச மக்கள் வீதிமறியல் போராட்டம்

திருகோணமலை- சர்தாபுர பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் உடனடியாக விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை- கண்டி பிரதான வீதி சர்தாபுர பகுதியில் இவ்வார்ப்பாட்டம் நேற்று (01) இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த நபருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதே நாளில் சாரதியை விடுதலை செய்துள்ளதாக கோரி இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து இடம்பெற்றதை அடுத்து உயிரிழந்தவரின் வீட்டுக்கு போக்குவரத்து பொலிசார் வருகை தந்து, கார் சாரதியின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25,000 ரூபாய் வழங்கியதாகவும் இதனை வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அப்பணத்தை பெற்றுக்கொடுப்பது நீதியா எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

இவ்விபத்தில் பலியானவர் திருகோணமலை கப்பல்துறை ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்தோனிமுத்து அந்தோணிசாமி (48 வயது) எனவும் தெரிய வருகின்றது.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Fri, 04/02/2021 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை