பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான குவெட்டாவில் சீனத் தூதுவர் தங்கியிருந்த சொகுசு ஹோட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதோடு மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
செரேனா சொகுசு ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் அந்தத் தாக்குதல் நடந்தது. காயமுற்றோரில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அந்த ஹோட்டலில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதருடன் மேலும் 3 பேர் தங்கியிருந்தனர். தாக்குதல் நடந்தபோது, சீனத் தூதர் ஹோட்டலில் இல்லை எனப் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
வெடிபொருள் நிரப்பிய கார் ஒன்று வெடித்ததாக அவர் ஆரி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எனினும், மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், வெடிகுண்டு வாகனத்தில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மற்ற பாதுகாப்பு அதிகாரிகள், கார் ஒன்று கார் நிறுத்துமிடத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடித்ததாகக் கூறினர்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. அது தற்கொலைத் தாக்குதல் என அந்த அமைப்பு கூறியது.
எனினும் தலிபான்களின் அறிவிப்பில் சீன தூதுவர் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த பலுகிஸ்தான் மாகாணம் ஆப்கான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமியவாத கடும்போக்காளர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் உட்பட பல்வேறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள பிரிவினைவாதிகள் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடி வருவதோடு இங்கு இடம்பெறும் சீனாவின் பாரி உட்கட்டமைப்பு திட்டங்களை எதிர்த்து வருகின்றனர்.
from tkn