கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சவாலை எதிர்கொள்வதற்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமென ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகளின் நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
இந்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் எச்சரிக்கை மிகுந்த நாட்களாக உள்ளன. அந்த சவாலை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச நாடுகளில் நிலைமை மிக மோசமானதாக காணப்படுகிறது. நிலைமையை கருத்திற் கொண்டு உற்சவங்கள், கூட்டங்கள், பயணங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்துவது அவசியமாகும்.
மிக அத்தியாவசியமான காரணங்கள் தவிர்ந்த பயணங்களை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அச்சுறுத்தல் மிகுந்த இக்காலத்தில் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எமது புத்திசாலித்தனமான மக்கள் என்ற வகையில் அவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அரசாங்கம் அதன் இலக்கை கைவிடவில்லை. தடுப்பூசிகள் வழங்கும் செயற்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படும்.
மக்கள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn