- பாராளுமன்ற செயலாளர் தகவல்
பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பீ.ஜயவர்தன மற்றும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், சவுதி அரேபியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பீ.எம்.அம்ஸாவை நியமிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது. அத்துடன், இத்தாலிக்கான இலங்கைத்
தூதுவராக எயார் மார்ஷல் சுமங்கள டயஸை நியமிப்பதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டதாக தம்மிக தஸநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், டி. சித்தார்த்தன் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
from tkn