புத்திக, குமார வெல்கம எம்பிக்களுக்கு அமைச்சர் பந்துல பதில்
உள்நாட்டில் உரிய தர நிர்ணயங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் பாம் ஒயில்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யயும் பாம் ஒயிலுக்கே தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களான புத்திக பத்திரன மற்றும் குமார வெல்கம ஆகியோர் எழுப்பிய குறுக்கீட்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்ததாவது,
பாம் ஒயில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக பேக்கரி உணவு உற்பத்திகள் மற்றும் பிஸ்கட் உற்பதிகள் வீழ்ச்சியடையுமென பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அது போலியான பிரசாரமாகும். பிஸ்கட் மற்றும் பேக்கரி உற்பதிகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. தடுப்பாடின்றி அவர்களுக்குத் தேவையான பாம் ஒயிலை இறக்குமதி செய்துக்கொள்ள முடியும். தேசிய எண்ணெய் உற்பத்தி மற்றும் தெங்கு உற்பத்தியை கட்டியெழுப்பவுமே பாம் ஒயில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் எவராயினும் தமது உற்பத்திக்கு பாம் ஒயில் அவசியமாயின் அதுதொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்து இறக்குமதி செய்துக்கொள்ள முடியும்.
என்றாலும், உள்நாட்டில் தர நிர்ணயங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகளுக்கு நாம் ஒருபோதும் தடைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்த மாட்டோம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாம் ஒயிலுக்கு மாத்திரமே இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களை சந்தைகளுக்கு கொண்டுவர முடியும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn