இறக்குமதி எண்ணெய்க்கு பதிலாக உள்நாட்டின் BCC தேங்காய் எண்ணெய்

இறக்குமதி எண்ணெய்க்கு பதிலாக உள்நாட்டின் BCC தேங்காய் எண்ணெய்-Locally Produced Coconut Oil from Sathosa Cooperative Shop-Bandula Gunawardena

- ச.தொ.ச ஊடாக நியாயமான விலையில்

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யை பி.சி.சி (BCC) ச.தொ.ச வலையமைப்பின் ஊடாக பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச வலையமைப்பு உட்பட 4,000 சூப்பர் மார்க்கட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சலுகைப் பொதிக்கு மக்கள் மத்தியில் பாரிய கேள்வி எழுந்துள்ளதுடன், அதிகமாக விற்பனையாகிய பொதியாக சாதனையும் படைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பத்திக் குச்சிகள், வண்ண பென்சில்கள் மற்றும் காத்தாடிகளை கூட உள்ளூர் சந்தைக்கு இறக்குமதி செய்து வழங்குவதற்கே கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். முந்தைய அரசாங்கத்தின் தன்னிச்சையான இறக்குமதிக் கொள்கைக்கு பதிலாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்த ஒன்றிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோயால் அனைத்து நாடுகளின் விநியோகச் சங்கிலியும் சீர்குலைந்து பொருளாதாரம் சுருங்கிவிட்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எமது அரசாங்கம் செயற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக தேங்காய் எண்ணெய்யை பி.சி.சி (BCC) நிறுவனத்தின் தர நிர்ணயங்களுக்கு அமைய உற்பத்தி செய்து சதொச வலையமைப்பின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

புத்தாண்டை முன்னிட்டு ச.தொ.ச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள், சுப்பர் மார்க்கட்டுகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் 1,000 ரூபா பெறுமதியான சலுகை பொதிக்கு பாரிய கேள்வி எழுந்துள்ளது. நேற்றுமுன்தினம் இந்த பொதி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதிகமாக வாங்கப்பட்ட பொதியாக சாதனைப் படைத்துள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sun, 04/04/2021 - 20:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை