- சுரங்கம் அருகில் நிறுத்தப்பட்ட வாகனமே காரணம் என தெரிவிப்பு
- நுழைவாயில் அடைத்துள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நிலை
கிழக்கு தாய்வானின் ஹுவாலியன் வடக்குப் பகுதியில் 490 பயணிகளுடன் பயணித்த புகையிரதமொன்று, சுரங்கப்பாதையொன்றினுள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (02) காலை, 8 பெட்டிகளுடனான குறித்த புகையிரதம், டைடுங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் புகையிரதத்தின் சாரதி உள்ளிட்ட 48 பேரே உயிரிழந்துள்ளதுடன், சுமார் 66 பேர் காயமடைந்து ஹுவாலின் நகரிற்கு அருகிலுள்ள 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுரங்கப் பாதைக்கு அருகில் சாய்வான இடமொன்றில் தரித்து நிறுத்தப்பட்ட வாகனமொன்று, உரிய முறையில் தரித்து நிறுத்தப்படாத நிலையில், வேகமாக பயணித்த புகையிரதம் குறித்த லொறியின் மீது மோதியதில் தண்டவாளத்திலிருந்து விலகிய புகையிரதம் சுரங்கப் பாதை வழியே சென்று பக்கவாட்டு சுவரில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதோடு, சுரங்கப் பாதையில் புகையிரதப் பெட்டிகள் குறுக்கு மறுக்காக மோதியுள்ளதால், அதற்குள் செல்வதற்கான வழிகள் அடைக்கப்பட்டு மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் சரியாக கணக்கிட்டு கூற முடியாத அளவிலான பயணிகள் சிலர் இன்னும் புகையிரத பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளதோடு, அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from tkn